கொரோனா அச்சத்தால்  பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட  மாணவி பலி..

உத்தரப்பிரதேச மாநிலம் ஷிகோகாபாத்தை சேர்ந்த அன்ஷிகா என்ற  மாணவியின் குடும்பம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லிக்கு இடம் பெயர்ந்திருந்தது.

சொந்த ஊருக்கு  வருவதற்காக அன்ஷிகாவும், அவரது தாயாரும் நொய்டாவில் இருந்து உ.பி.அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளனர்.

உடல் நலம் சரியில்லாததால் களைப்பாக இருந்த அன்ஷிகாவை பார்த்த சக பயணிகள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் அடைந்தனர்.

பேருந்தின் நடத்துநருக்கு இது குறித்துத் தெரிவித்துள்ளனர்.

அந்த நடத்துநரும், ஓட்டுநரும் சேர்ந்து, எந்த கேள்வியும் கேட்காமல், அன்ஷிகாவை பேருந்தில் இருந்து தூக்கி வீசி உள்ளனர்.

ரோட்டில் விழுந்த அன்ஷிகா, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

அந்த இளம்பெண்ணின் தாய், ‘என் மகளுக்கு கொரோனா தொற்று இல்லை’’ என்று கதறியும் ,  பேருந்து ஊழியர்கள் இரக்கமின்றி ஒரு உயிரை பறித்துள்ளனர்.

யமுனா எக்ஸ்பிரஸ்வே என்ற இடத்தில் அந்த மாணவி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்து சில நாட்கள் ஆனாலும் இப்போது தான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் உள்ள பெண்கள் ஆணையம் இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்த உ.பி.போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

-பா.பாரதி.