கமதாபாத்

மோடியின் மீது உள்ள ஆதரவால் காதல் கொண்டு திருமணம் செய்த கணவன் தனது மனைவியை அடித்து உதைப்பதாக புகார் வந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஜெய்தேவ்.  இவர் பிரதம்ர் மோடி மீது மிகவும் அன்பு கொண்ட ஒரு ஆதரவாளர்.   இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவுகளில் எதிர்த்து பின்னூட்டம் இட்டவர்.   அதைக் கண்ட ஒரு பெண் இவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.  இருவரும் சந்தித்து, சந்திப்பு காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளது.

இவ்வாறு தனக்கும் அல்பிகா பாண்டே என்னும் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்ததை ஜெய்தேவ் டிவிட்டரில் பதிந்தார்.    அதை பாஜகவினர் பலரும் மறுபதிப்பு செய்யவே அந்த பதிவு வைரலாகியது.   கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்ட இருவரிடையே தற்போது சண்டை ஏற்பட்டுள்ளது.   இது குறித்து அல்பிகா பாண்டே டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அல்பிகா தனது பதிவில், “ராகுல் காந்தியை தாக்கி ஜெய்தேவ் அளித்த பின்னூட்டத்தால் கவரப்பட்டு ஒரு பெண் அவரை திருமணம் செய்துக் கொண்டதை அறிந்திருப்பீர்கள்.  நான் தான் அந்தப் பெண்.   தற்போது எங்கள் திருமணத்தின் மற்றொரு பக்கத்தை தெரிவிக்கிறேன்.

எனக்கு 19 வயதாகிறது.  அவருக்கு 29 வயதாகிறது.  அவர் முகத்தை பார்த்தால் அவ்வாறு தெரியாது.  அவர் எனது புகைப்படத்தை எனது அனுமதி இன்றி அவருடைய சொந்த விளம்பர நோக்கத்தில் பதிந்துள்ளார்.   இதன் மூலம் அவர் பாஜக மற்றும் சமூக வலை தளங்களில் புகழ் பெற நினைக்கிறார்.

அவர் என்னை மனதளவிலும் உடலளவிலும் மிகவும் கொடுமை படுத்தி உள்ளார்.  அவருடைய அடி உதைகளை தாங்க முடியாமல் நான் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்.  அவருடைய குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.  என்னை விட்டு வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை.   அப்படியே அனுமதித்தாலும் என்னுடன் அவர்களில் ஒருவர் உடன் வருகிறார்” என  பதிந்துள்ளார்.

தனது டிவிட்டரை அவர் குஜராத் காவல் துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு ஃபார்வர்ட் செய்துள்ளார்.   இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் தனது பிறந்த வீட்டில் அல்பிகா தங்கி வருகிறார்.  அத்துடன் தன்னை கழிப்பறையிலும் அவர்கள் கண்காணிப்பதாக புகார் கூறி உள்ளார்.