மும்பை:

மதுபான வகைகளுக்கு பெண்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒரு பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மகாராஷ்டிரா நந்துர்பாரில் உள்ள சத்புதா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடந்த ஒரு விழாவில் அம்மாநில பாஜக அரசின் நீர்வள துறை மற்றும் மருத்துவ கல்வி துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்துகொண்டார். இந்த விழாவில் ஆலை தலைவர் தீபக் பட்டீல் தங்களது நிறுவன மதுபானங்கள் குறைவான அளவிற் விற்பனையாகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு கிரிஜ் மகாஜன் தனது உரையில் போது பதிலளித்து பேசுகையில், ‘‘விற்பனை அதிகரிக்கும் வகையில் மதுபான வகைகளுக்கு பெண்களின் பெயரை தயாரிப்பு நிறுவனங்கள் சூட்ட வேண்டும்.
பாபி, பிங்காரி, ஜூலி போன்ற ரக மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகிறது’’ என்றார்.

உங்களது மதுபானத்தின் பெயர் என்ன என்று அமைச்சர் கேட்டதற்கு, மகாராஜா என்று பதிலளித்தார்.
‘‘பின்னர் எப்படி விற்பனை சாத்தியமாகும். பெயரை மகாராணி என்று மாற்றுங்கள். அப்புறம் பாருங்கள் விற்பனை பிச்சுக்கிட்டு போகும். தற்போது இதை தான் விரும்புகிறார்கள். மதுபானங்களுக்கும் பெண்கள் பெயர் தேவைப்படுகிறது. அதேபோல் புகையிலை பொருட்களக்கு கமல், விமல், சுமன் என்று பெயர் சூட்டுகிறார்கள்’’ என்றார் அமைச்சர்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக விற்பனையில் மாற்றம் ஏற்படும்’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் நாசிக் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த பீரித்தி சர்மா மேனன் கூறுகையில், ‘‘இது மிகவும் கீழ்த்தரமான பேச்சு. இதை அவர் கூறுவதற்கு என்ன காரணம். மதுபான விற்பனையை அதிகரிக்க அமைச்சர் ஆலோசனை கூறியது அதிர்ச்சியாக உள்ளது. இது தான் அவரது சமூக பொறுப்பா?. பெண்களுக்கு எதிரான கருத்தை அவர் எப்படி கூறலாம்?. இதற்காக அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

இதன் பின்னர் மும்பையில் அவசர அவசரசமாக அமைச்சர் நிருபர்களிம் கூறுகையில், ‘‘நான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பெண்களின் உணர்வுகளை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. உள்நோக்கம் இன்றி நான் செய்த தவறு இது’’ என்றார்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு நெருக்கமான அமைச்சரான மகாஜன் சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. 2015ம் ஆண்டில் தாவூத் இப்ராகிம் உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். கராத்தேயில் கறுப்பு பெல்ட் பெற்ற இவர் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

 

m