சென்னை:

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தவரு மான மறைந்த  ஜி.கே.மூப்பனாரின் சகோதரரும், ஜி.கே.வாசனின் சித்தப்பாவுமான ஜி. ரெங்கசாமி மூப்பனார் காலமானார்..

வயது முதிர்வு காரணமாக ஆழ்வார்பேட்டை இல்லத்தில்  ஓய்வெடுத்து வந்த நிலையில்,  இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் காலை சுமார 9.30 மணிக்கு அவர்  மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85.

மறைந்த ரெங்கசாமி மூப்பனாரின் உடல்,  அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த சுந்தர பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  அங்கு நாளை மாலை 5 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

ரெங்கசாமி மூப்பனார்  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மிகப்பெரும் செல்வந்தர்களில் (பெரு நிலக்கிழார்) ஒருவர்களான கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தை சேர்ந்தவர். ( பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், வடபாதி மங்கலம் முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், கபிஸ்தலம் மூப்பனார்).

இவர்   உலக புகழ்பெற்ற திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை நடத்தும் தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவராக பதவி வகித்து வந்தவர்.

பாரதியார் பேரவையின் தலைவராக இருந்து பாரதியை பற்றி பட்டிமன்றம், பாரதியார் பாடல் கச்சேரிகளையும் தொடந்து நடத்தி புகழ் பெற்றவர்.

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் ஆண்டுதோறும் பிற மாநிலங்கள், நாடுகளைச் சேந்தவர்களும், இளம் கலைஞர்களையும் கலந்து கொண்டு நான்கு  நாட்கள் நடக்கும்  நாட்டியாஞ்லிக்கும் நடன சபா தலைவராக இருந்தார்.

மேலும்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.