சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் தன்னிச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் , சினிமா தயாரிப்பாளர் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா அறிவித்து உள்ளார்.

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்க எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில், இயக்குநர் சேரன் உள்பட சிலர் இன்று 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.

சேரனுக்கு சினிமா உலக பிரபலங்கள், நடிகர்  ராதாரவி, ராதிகா, எஸ்.ஏ.சந்திரசேகர், ராஜேந்தர் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஞானவேல் ராஜா, வினியோகஸ்தர் சங்க தேர்தலில், சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், அதன் காரணமாகவே தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.