’’மாஸ்க்’’ அணியாமல் சாலையில் திரிந்த ஆட்டை ‘’கைது செய்த’’ போலீஸ்..

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பீகான்கஞ்ச் பகுதியில் ஆடு ஒன்று , ஊரடங்கின் போது, சாலையில் சுற்றித் திரிந்துள்ளது.

அந்த வழியாக ஜீப்பில் ரோந்து வந்த போலீஸ்காரர் ஆட்டை ’’கைது’’ செய்து, ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

ஆட்டுக்குச் சொந்தக்காரர் அலறி அடித்து போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

ஆட்டை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த காவலர்’’ நாய்கள் கூட ’’மாஸ்க்’’அணிந்து ரோட்டில் நடமாடுகின்றன. நீ ஏன் ஆட்டுக்கு ’’மாஸ்க்’’ மாட்டாமல் நடமாட விட்டுள்ளாய்?’’ என்று கேட்டுள்ளார்.

பின்னர் கடுமையாக எச்சரித்து, ஆட்டை ’’விடுதலை’’ செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார், அந்த போலீஸ்காரர்.

இது குறித்த செய்தி, கைதான ஆட்டின் படத்தோடு வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளான அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சைபுதீன் ‘’ ஆட்டை கைது எல்லாம் செய்யவில்லை. ஊரடங்கு நேரத்தில் சாலையில் ஒருவர் முகக்கவசம் அணியாமல் ஆட்டை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது  போலீசார் அங்கு வந்ததால், ஆட்டை சாலையில் விட்டு விட்டு ஓடி விட்டார்,

இதனால் அந்த ஆட்டை போலீசார் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். கொஞ்ச நேரம் கழித்து போலீஸ் நிலையம் வந்த ஆட்டு உரிமையாளரை, ’மாஸ்க் அணியாமல் இனி வெளியே செல்லக்கூடாது என எச்சரித்து, ஆட்டையும் அவரையும்  அனுப்பினோம்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

-பா பாரதி.