கொழும்பு:

மெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து, அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபறக்கத் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக, இலங்கை  முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இதையொட்டி,   அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டு இருப்பதாக இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில்,  இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்,  நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விசாரிப்பதாக அறிவித்து உள்ளது. இதன் காரணமாக இலங்கையில் பரபரப்பு நிலவி வருகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே கோத்தபய தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது தெரிய வரும்.