டில்லி:

பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (ஐ.ஓ.சி) மத்தியஅரசு தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியை வழங்கி உள்ளது.

கடந்த  2008ம் ஆண்டு நடைபெற்ற  மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு வீரர்களை இந்தியா அனுமதிக்க மறுத்து வந்தது. இதை பரிசீலனை செய்யும்படி பாகிஸ்தான் உள்பட உலக நாடுகள் கோரிக்கை வைத்து வந்தன.

இதற்கிடையில் வரும்  வரும் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ஒடிசா மாநிலத்தில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. மேலும்,  உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டில்லியில் அடுத்த ஆண்டு நடை பெற உள்ளது.

அத்துடன்  17வயது குறைவானவர்களுக்கான ஃபிஃபா பெண்கள் உலக கோப்பை 2020 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்தியாவில் குவிவார்கள். போட்டிகளில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதி இந்தியா வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசாங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (ஐ.ஓ.சி) ஒரு எழுத்துப்பூர்வ உறுதிமொழியை வழங்கியது,

அதில், இந்தியாவுக்கு விளையாட வருகை தரும் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் “எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளுக்கும் பிற அரசியல் விஷயங் களில் கொள்கைகளுக்கும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி” பங்கேற்க அனுமதி வழங்கப்படு வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  அரசாங்கத்தின் இத்தகைய அர்ப்பணிப்பு ‘வசுதைவ குடும்பகம்’ (‘Vasudhaiva Kutumbakam’ ) அல்லது ‘ சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தின் பின்னணியில் உள்ள உலகம் ஒரு குடும்பம் என்ற சாராம்சத்தில் அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் இனிமேல் கலந்துகொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்தியாவில் 2026ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டியும், 2030ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளும் 2032ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியும் நடைத்த திட்டமிடப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.