மும்பை:

குஜராத் தோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

குஜராத் தேர்தலில் தோல்வி அடைவதை தவிர்க்கவே மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை குறைத்துள்ளது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் 28 சதவீத வரிப் பட்டியலில் உள்ள 228 பொருட்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ‘‘ எந்த ஒரு விவகாரத்திலும் அரசியல் லாபம் பெறுவதிலும், விளம்பரம் பெறுவதிலும் பாஜக நிபுணத்துவம் பெற்றவர்கள். போராட்டங்களை புறந்தள்ளி ஜிஎஸ்டி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறி வந்த மத்திய அரசு, தற்போது பணிந்துள்ளது.

குஜராத் தேர்தலில் பாஜக கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளது தான் இதற்கு காரணம். குஜராத் கிராமங்களுக்குள் பாஜக தலைவர்கள் செல்ல மக்கள் அனுமதி அளிக்கவில்லை. பாஜக தலைவர்களின் போஸ்டர்கள் அகற்றப்படுகின்றன. ஜி.எஸ்.டி பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. சாதாரண மனிதனின் வரவு செலவு திட்டத்திலும் பெரும் அதிருப்தியை ஜி.எஸ்.டி உருவாக்கியுள்ளது.

பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என அனைவரும் நிர்வாகத்தை தள்ளாட விட்டுவிட்டு குஜராத் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலுக்காக பாஜக அரசு பெரிய அளவில் பணத்தையும் செலவிட்டு வருகிறது’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.