சென்னை:
மிழகம் முழுவதும் அரசு இசேவை மையங்கள் மூலம் ஆதார் எடுக்கும் பணி இன்று தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள  371 அரசு இசேவை மையங்கள் மூலம் இன்று முதல் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது .
ecenter
தமிழகத்தில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி இதுவரை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை செய்து வந்தது. 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் இதுவரை  95 சதவீதம் பேருக்கு  ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணியை தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இந்த பொறுப்பு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மற்றும் ‘எல்காட்’ நிறுவனத்திடம் வந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக ‘ஆதார்’ குறித்த புள்ளி விவரங்கள் அரசு கேபிள் நிறுவனத்தின் சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது.
அதை தொடர்ந்து  இன்று முதல் தமிழகம் முழுவதும்  ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி மீண்டும் தொடங்கியது. 285 தாலுகா அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, 15 மண்டல அலுவலகங்கள், தலைமை செயலகம், எழிலகம் உள்ளிட்ட 63 இடங்களில் சென்னையில் மட்டும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கப்படுகிறது. மொத்தம் 371 இ சேவை மையங்களில் இப்பணி நடைபெறுகிறது.
aathar
இதுகுறித்து அரசு கேபிள் டி.வி நிறுவன நிர்வாக இயக்குனரும் கூறியதாவது:-
ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் முழுவீச்சில் செயல் படுத்தப்படுகிறது.   தலைமை செயலகம், சேப்பாக்கம் எழிலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள் மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் என 339 இடங்களிலும் 32 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களிலும் என மொத்தம் 371 இடங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கப்படும்.
சென்னையில் மட்டும் 63 இடங்களில் இந்த சேவை நடைபெறுகிறது. அடுத்த வாரம் முதல் 124 நகராட்சி பகுதியிலும் 11 மாநகராட்சியிலும் மாநகராட்சியின் 39 மண்டலங்களிலும் ‘எல்காட்’ நிறுவனம் மூலம் இந்த பணி தொடங்கும்.
அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு மொபைல் குழுவும் அனுப்பப்படும். 5வயது நிறைந்த குழந்தைகளுக்கு தனியாக ஆதார் எண் வழங்கப்படும்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் புகைப்படம் எடுக்கலாம். ஆனால் பெற்றோர்களின் ஆதார் எண்களுடன் குழந்தை எண் இணைக்கப்படும்.
ஆதார் புகைப்படம் எடுக்கும் மையங்களில் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை மையங்களில் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கின்ற நிலை தற்போது உள்ளது.
இந்த நிலையை மாற்றும் வகையில் விரைவில் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தவுடன் அவர்களது செல்போனுக்கு எந்த தேதியில் புகைப்படம் எடுக்க செல்ல வேண்டும் என்ற தேதி எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட அந்த தேதியில் வந்தால் நெரிசல் இல்லாமல் புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.
ஆதார் புகைப்படம் எடுக்கும் பணியில் சுமார் 600 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
புகைப்படம் எடுப்பதற்கான கேமரா, கைரேகை, கண்விழி பதிவு செய்யும் கருவிகள் அடங்கிய ‘கிட்’ 1280 பயன்படுத்தப்படுகிறது.
இவை தவிர மேலும் 1000 ‘கிட்டுகள்’ தயாராகவும் இருக்கின்றன.
இதுவரையில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.