சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வராததல் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

ஏற்கனவே பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு எந்தவித முடிவும் அறிவிக்காத நிலையில், இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடு.பட்டுள்ளனர்.

இன்றைய  போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு எச்சரித் துள்ள நிலையில், எச்சரிக்கையை மீறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுமுதல்  25-ந்தேதி வரை 4 நாட்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.  இன்று அனைத்து தாலுகா அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள்  பணிக்கு செல்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன.

பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கப்படாததால், தங்களது குழந்தைகளை மீண்டும் வீட்டுக்கு அழைச் சென்றனர்.

பணிக்கு செல்லாத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அரசு அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட் டம் செய்து வருகின்றனர். தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலான வர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்கள் வருகை தந்தனர்.

சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு அலுவலகங்கள் நிறைந்த எழிலகம், குறளகம், பனகல் மாளிகை போன்றவற்றில் அரசு ஊழியர்கள் குறைந்த அளவில் பணிக்கு வந்திருந்தனர்.

ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் வந்தவாசி ஒன்றியத்தில் 140 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டத்திலும்  பல பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வராத‌ காரணத்தால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  நாகை மாவட்டத்தின் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கீழ்வேளூர், பனங்குடி உள்ளிட்ட பல இடங்களில் பள்ளிகள் மூடிக்கிடப்பதை கண்ட மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிகிறது.

இதுபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஏராளமான பள்ளிகள் முடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று  ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.