சென்னை:

மிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை இயங்கும் என்று தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, (28.10.19) அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதற்கு ஈடாக நாளை பணி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால், சொந்த ஊருக்கு செல்பவர்கள் உடனே திரும்ப முடியாது என்பதால், மேலும் ஒருநாள் விடுமுறை விடும்படி அரசு ஊழியர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று தமிழகஅரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையை ( 28.10.19) அரசு விடுமுறை தினமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அன்று விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் நாளை சனிக்கிழமை (09.11.19) அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசின் முழு வேலை நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்.