சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு காரணமாக,  தமிழகத்தில்,அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.  இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழகஅரசு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகஅரசு பள்ளிகளில் படித்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தமிழகத்தில்  26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள்  உள்ளன. மேலும்,  சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.  இவற்றில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல்  வரும் (நவம்பர்) 12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவம்பர் .16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும் வகையில்,   7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற, 6 முதல் 12-ம் வகுப்பு வரை தாங்கள் படித்த அரசுப் பள்ளியின் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் 6 – 8, 9 – 10, 11 – 12 என நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை என வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கும் பட்சத்தில் 3 பள்ளிகளின் படித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அதேபோல இறுதியாக 12-ம் வகுப்புப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கையெழுத்து மற்றும் சீல் அவசியம்.

அதேபோல மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மை என உறுதி செய்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரும் கையொப்பமிட வேண்டும் என்ற் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு இணைதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இணையதள முகவரி : http://tnmedicalselection.net/news/02112020234138.pdf