சென்னை:

அரசு பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இடம் மாற்றம் தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தனியாக வீட்டில் டியூசன் நடத்தி வருகின்றனர். இதற்காக பணம் வசூலித்து வருகின்றனர். தனன்னிடம் டியூசன் படிக்க வரச்சொல்லி பள்ளி மாணவ மாணவிகளையும் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரை அரசு 2 கிமீ தூரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு இடம் மாற்றியது. இந்த இடமாற்றம்  கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது.

அரசின் உத்தரவை எதிர்த்து ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில்,  தான் டியூசன் எடுப்பதாகவும், தன்னிடம் ஏராளமான மாணவர்கள் படித்து வருவதால், அவர்கள் படிப்பு பாதிக்கப்படும் என  தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை தொடர்ந்து,  அரசு பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளதுடன், டியூசன் எடுப்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் அவ்வப்போது,  அரசை மிரட்டுவதற்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை கண்டித்த நீதிமன்றம், இதுபோன்ற போராட்டங்கள்  இளைய தலைமுறையின ருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் புகார் பற்றி தெரிவிக்க ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை  8 வார காலத்திற்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது