கோவை:

மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்டு சுவர் இடித்து விழுந்து 17 பேர் பலியான  நிலையில், அங்கு பாதிக்கப்பட்ட வர்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை மற்றும், அரசே இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக தமிழகம்முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, அருகே உள்ள நடூர் கிராமத்தில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் ஒருவருடைய வீட்டின்  கருங்கல்லால் ஆன காம்பவுண்டு சுவர்  திடீரென இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக அந்த காம்பவுண்டுசுவரை ஒட்டி வீடுகள் கட்டி வசித்து வந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலியானர்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிலரின் வஞ்சக புத்தியால், ஜாதிய பிரச்சினையாக உருவெடுத்து அரசியலாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் திமுக எம்.பி. ராஜா உள்பட கட்சியினர் சென்றனர். அங்கு விபத்துக்கு குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தேவையான உதவி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை. தடியடித் தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு, 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தச் சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ, நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தச் சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காவல்துறை, போராடிய உறவினர்கள் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல, எதற்காக இத்தகைய தாக்குதலை காவல்துறை நடத்த வேண்டும்? திட்டமிட்டு பொது மக்களை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார்கள். அதுவும் மருத்துவமனை வளாகத்திலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் எத்தகைய தாக்குதல்களும் நடத்தக் கூடாது என்ற தார்மீக நெறிமுறைகளை எல்லாம் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது. மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி மக்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கம் அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்த 17 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் இலவசமாகக் கட்டித் தரப்பட வேண்டும்.  எனத் தெரிவித்துள்ளார்.