உத்தரகாண்ட்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளில் உத்தரகாண்ட் அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அடுத்த ஆண்டு ஜனவரியில் மகா கும்பமேளா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.375 கோடியை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், கும்பமேளாவிற்காக ஏற்பாடுகளில் உத்தரகாண்ட் அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதற்காக கடந்த 16ம் தேதி தூய்மை கங்கை திட்டக்குழு, நதியை சுத்தம் செய்வதை மேற்பார்வையிடும் நீர் அமைச்சக அமைப்பு ஆகியவை விழாவுக்கு தேவைப்படும் நிதி குறித்து ஆலோசனை நடத்தியது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக, 16,075 சமூக கழிப்பறைகளை, 20,000 சமூக சிறுநீர் கழிப்பறைகளை உருவாக்குவதற்காக மாநிலம் ₹ 85 கோடியை கோரியுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தூய்மை கங்கை திட்ட இயக்குநர் ராஜிவ் ரஞ்சன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறியதாவது: கும்ப மேளாவை ஏற்பாடு செய்வது பாதுகாப்பானதா என்பது குறித்து உத்தரகாண்ட் அரசு எந்த விவாதமும் மேற்கொள்ளவில்லை.

உலகம் இன்னும் கோவிட் தொற்றுநோயிலிருந்து மீளவில்லை, உலகளாவிய பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட் 19 காரணமாக கும்பமேளா பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை.

ஆனால் நிறைய நேரம் உள்ளது, நிலைமை மாறக்கூடும். இப்போது இருப்பதைப் போலவே இன்னும் ஆபத்து இருந்தால், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.