வழக்கமான டாஸ்மாக் மதுக்கடை முகப்பு சாத்தப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகள் என்று கூறி மதுக்கடைகள் தொடர்ந்து இயங்க தமிழக அரசு வழிவகை செய்தது. ஆனால் இதற்கு முறையான  அறிவிப்பு செய்யவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கடைக்குப் பக்கத்தில் புது வழி

இந்த வழக்கில் நீதிமன்றம்,  பெயர் மாற்றம் செய்யாமல் நெடுஞ்சாலை ஓரங்களில்  செயல்பட்டு வந்த  மதுபானக் கடைகளை உடனே மூட  உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பல கடைகள் மூடப்பட்டன.

புதிதாக சுற்று வழி

ஆனால், நீதிமன்ற உத்தரவை செல்லாத்தாக்கும் வகையில் தமிழக டாஸ்மாக் அரசு மதுக்கடைகள் பல செயல்படுகின்றன. அதாவது நெஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்படும் மதுக்கடைகளின் வழியை மாற்றி, தட்டி வைத்து அடைத்து கூடுதல் தூரமாக்கி அதே மதுக்கடைகள் செயல்படுகின்றன.

இதற்கு ஒரு உதாரணம், சென்னை மடிப்பாக்கம் சீனிவாசா நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை.

சாலை முகப்பில் இருந்த மதுக்கடை முன்கதவை மூடிவிட்டு, டின்ஷீட் போட்டு சுற்றி சுற்றி வரும்படி பாதை போட்டு 500 மீட்டர் நீளத்தை கணக்குக் காட்டியிருக்கிறார்கள்.

கடை எண் உட்பட விபரங்கள் ஏதும் இல்லை. போர்டும் இல்லை.

மதுக்கடை பாரில் வழக்கம்போல “உற்சாகம்”

அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுக்கடைகளே, நீதிமன்ற உத்தரவை இப்படி “காமெடி” செய்து செல்லாததாக்கலாமா என்று குடிக்காத பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

குடிமகன் ஒருவர் எழுப்பும் கேள்வி, இன்னும் அர்த்தமுள்ளது:

அதாவது, “இந்த டாஸ்மாக் மூளைய நீட் தேர்வுல ஏன் நம்ம கவர்மெண்ட் காட்டலை?”

அதே நேரம், “இது ஒன்றும் புதிதல்ல. கேரளாவில் ஏற்கெனவே இப்படிச் செய்தார்கள். ஆனால் அங்கு தனியார்கள் மதுக்கடை நடத்துகிறார்கள். இங்கே அரசே நடத்தும் மதுக்கடைகள், நீதிமன்றத்தை ஏமாற்றுவதுதான் எக்ஸ்ளூசிவான விசயம்” என்றும் குடிமகன்கள் பலர் தெளிவாகச் சொல்கிறார்கள்.