டில்லி:

பாரதிய ஜனதா கட்சி அறிவித்தபடி, ‘பிரதான் மந்தரி கிசான் சம்மான் நிதி’ (பிஎம்.கிசான்) திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுவார்கள் என்று  கூறிய மத்திய அமைச்சர்  நரேந்திர சிங் தோமர், நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தின்கீழ் 10 கோடி விவசாயிகள் இணைக்கப்படுவார்கள் என்று அறிவித்து உள்ளார்.

நாட்டில் உள்ள 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை 3 தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல்கட்டமாக உ..பி. மாநிலம் கோரக்பூர் விவசாயிகள் முதல் தவணை பெற்றனர்.

பிஎம் கிஷான் திட்டத்தில் 12.5 கோடி விவசாயிகளை இணைக்க முடிவு செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 2 கோடி விவசாயிகள் இணைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 14.5 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களும் இணைந்துள்ளன. இந்த திட்டத்துக்காக அரசு 2019-20 ஆம் ஆண்டில் ரூ.87 ஆயிரத்து 217.50 கோடியை  மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தோமர்,  “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை  3 கட்டங்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை   முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நாடு முழுவதும் சுமார் 5.88 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர். தற்போது 3.40 கோடி விவசாயிகள் 2-ம் கட்ட தவணையை வங்கிக் கணக்கில் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறியவர், அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.