சென்னை:

நேற்றைய  செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர்  கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம், தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள்,  இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தும், ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டியதற்காக மன்னிப்பு கோரி உள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அந்த பெண் பத்திரிகையாளருக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன், தனது கண்டனத்தை இமெயில் மூலம் ஆளுநருக்கு அனுப்பியிருந்தார். மேலும் டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாக ஆளுநர், லட்சுமி சுப்பிரமணியனுக்கு பதில் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

அதில், என் பேத்தி போல நினைத்து கன்னத்தில் தட்டினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.