சென்னை,

மிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் கடந்த மாதம் கோவையில் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மீண்டும், குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள அங்கு சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று குமரி மாவட்டம் செல்கிறார்.  அங்கு அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை கன்னியாகுமரி செல்லும் பன்வாரிலால், அங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கன்னியாகுமரி செல்கிறார்.

அங்கு, அரசு விருந்தினர் மாளிகையில் ஆளுநர் மாலை 4முதல் 5 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.

அப்போது அரசு அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

ஏற்கனவே கோவையில் நடத்திய ஆய்வுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் தனது ஆய்வு பணியை மேற்கொள்கிறார்.

ஏற்கனவே நடத்திய ஆய்வுக்கு பதில் அளித்த ஆளுநர் மாளிகை, “சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை’ மேற்கொள்ளப்பட்டது என்று கூறிய நிலையில், தற்போது அவர் மீண்டும் ஆய்வு சென்ற முயன்றிருப்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.