சென்னை,

புதுச்சேரியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு ரகசியமாக சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில், மாநில அரசு ஒப்புதலின்றி, கவர்னர் கிரண்பேடி, தன்னிச்சையாக பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு நியமன சட்டமன்ற உறுப்பினராக நேற்று இரவு ரகசியமாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் 3 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்தது செல்லாது என காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று மனுவில்  மனுதாரர் லட்சுமி நாராயணன் தரப்பில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன் சட்டமன்ற சபாநாயகரிடம் மனு கொடுக்க வேண்டும். அவரது பரிந்துரைப்படி, துணை நிலை ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், சட்டமன்ற சபாநாயகர், எவ்வித பரிந்துரையும் செய்யாமல், விதிமுறைகளை மீறி துணை நிலை சபாநாயகர் கிரண்பேடி 3 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துள்ளார். இந்த பதவி பிரமாணம் செல்லாது என வாதிட்டனர்.

மேலும், மாநில அரசுடன் எவ்வித கலந்தாலோசனை நடத்தாமல், பதவி பிரமாணம் செய்துள்ளது தவறானது என கூறினர்.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.