டில்லி

காத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு அமர்வு ஒன்றை நிகழ்த்துமாறு ஐநா சபைக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றை மத்திய அரசு கூட்டி இருந்தது.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கு பெறவில்லை.    காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்துக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஐ நா சபையில் சிறப்பு அமர்வு ஒன்றை நிகழ்த்த கோரிக்கை அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.  இந்த தீர்மானைத்தை சுஷ்மா ஸ்வராஜ் கொண்டு வந்தார்.  இதற்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் வரும் அக்டோபர் 2 ஆம் தேதியில் இருந்து காந்தியின் கொள்கைகளை பரப்பும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த கூட்டங்களில் அகிம்சை மற்றும் அமைதி குறித்த காந்தியின் கருத்துக்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் காஷ்மீர் முதல்வர் மெகபூபா ஆகியோர் இணையம் மூலம் காந்தியின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என யோசனை தெரிவித்தனர்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் மூலம் நாட்டில் நிலவி வரும் சாதி மத வேறுபடுகள் களையப்பட வேண்டும் என கூறினார்.  அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காந்தியின் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.