டெல்லி: 2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா லாக்டவுன், பருவமழை காரணமாக நாட்டில் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட, நாடு முழுவதும் அதன் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்தது.

விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந் நிலையில், தற்போது நிலைமை முழுமையாக சீராகி விட்டது. இதையடுத்து, அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.