டில்லி

விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் பல திட்டங்களை அமைக்க உள்ளதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் விவசாயக் காலங்கள் தவிர மற்ற நாட்களில் மக்கள் வேலை இன்றி வாடி வந்தனர். அதை ஒட்டி முந்தைய காங்கிரஸ் அரசு 100 நாட்கள் கட்டாய வேலைத் திட்டத்தை அறிவித்தது. மகாத்மா காந்தி கிராமப்புற கட்டாய வேலைவாய்ப்பு திட்டம் என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டம் நாடெங்கும் செயல்பட்டு வருகிறது.

மக்களவையில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் நேற்று பேசிய போது, “பிரதம மந்திரி விவசாய காப்பீடு திட்டத்தை அனைத்து விரிவாக்க அரசு முயன்று வருகிறது. இதற்கான யோசனைகள் அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் வரவேற்கப்படுகிறது. இதைப் போல் ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு முழு நிவாரணம் கிடைக்க நானும் பிரதமரும் திட்டம் தீட்டி உள்ளோம்.

பாஜக ஆட்சியில் தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தற்போது படித்த இளைஞர்களில் பலர் விவசாயம் செய்ய முன் வந்துள்ளனர். அவர்கள் புடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க உள்ளனர். இதனால் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த மாறுதல் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது.

தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மண்வள அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 9.2 கோடி அட்டைகள் அளிக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் விவசாய மண் வளம் அதிகரிக்கப்பட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. முக்கியமாக மத்திய அரசு யூரியா தட்டுப்பாட்டை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் கள்ளச் சந்தையில் யூரியா விற்பது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்கள் மேம்பாட்டுத் திட்டங்களால் அவர்கள் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த விரும்புகிறது. அதை விடுத்து 100 நாட்கள் கட்டாய வேலை திட்டத்தைத் தொடர விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.