டெல்லி:

குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை  கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வடமாநிலங்கள் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து, வன்முறைகள் பரவி வருகின்றன.

காங்கிரஸ்,, திமுக உள்பட எதிர்க்கட்சிகள் மத்தியஅரசின் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக மாணவர்களும் சட்டத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இன்று மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, மத்திய பாஜக அரசு தனது பிடிவாதத்தை கைவிட வேண்டும் என்று டிவிட்பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில்,  ”குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள், அமைப்புகளை தாண்டி பொதுமக்களும் போராட்டக் களத்தில் உள்ளனர்.

தற்போது மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை பதிவு செய்துள்ளன. எனவே மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதுபோலவே போராட்டம் நடத்துப வர்களும் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.