பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் ஆர்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்தது.

ஆனால், பின்னர் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந் நிலையில், தேர்தலில் மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து அக்கட்சி தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: வேட்பாளர்கள், தொண்டர்களிடம் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்கள் எங்களுக்கு சாதகமாகவே உள்ளன.

இரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனவே, மகா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.