நெல்லை:

பாளையங்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் 13 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெலட்டின் வைத்திருந்ததாக கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சிங்காரம் என்பவர். இவர் வழக்குக்காக போலீஸ் வாகனத்தில் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

காவ உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.  இந்த வாகனம், நெல்லை கேடிசி நகர் செக் போஸ்ட் அருகே சென்றபோது 13 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வாகனத்தை மறித்தது.

விநாடி நேரத்தில், உள்ளே இருந்த போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை அந்த கும்பல் பீய்ச்சி அடித்தது. இதை எதிர்பார்க்காத காவலர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

அப்போது காவல்துறை வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், காவலர்கள் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து கண்ணாடியை உடைத்தது.

பிறகு, வாகனத்தின் உள்ளே இருந்த கைதி சிங்காரத்தை வெளியே இழுத்துப் போட்டது. தொடர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. சிங்காரம் உயிரிழந்துவிட்டதாக கருதிய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.  

இதன் பிறகு, உயிருக்கு போராடிய கைதி சிங்காரத்தை மீட்ட பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  ஆனாலும்  சிகிச்சை  பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தாக்குதல் நடைபெற்ற இடத்தை நெல்லை மாநகர காவல் ஆணையர் திருஞானம் தலைமையிலான போலீஸார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.