சென்னை:  தமிழகத்தில் திரையரங்குகள் வரும் 10ந்தேதி முதல் திறக்க அனுமதி வழக்ப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என்றும்,  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்றும்அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்

திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்

பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும்.

திரைப்படத்தின் இடைவேளையின்போது மக்கள் வெளியே வருவதை தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும்.

ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Curfew | TN Govt | ஊரடங்கு உத்தரவு | தமிழக அரசு | திரையரங்கு