புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில், ஏர்கண்டிஷன், டெஸர்ட் கூலர் மற்றும் ‍ஃபேன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவது குறித்து, மத்திய அரசின் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தம் 18 பக்கங்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, வீட்டில் இயங்கும் ஏர்கண்டிஷன் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்க வேண்டும். அதேபோல், ஈரத்தன்மையும் 40 முதல் 70% வரை இருப்பது அவசியம்.

மேலும், அறையின் ஏர் கண்டிஷனர்களால் மறுசுழற்சி செய்யப்படும் குளிர்ந்த காற்று, வெளியிலிருந்து வரும் காற்றோடு சேர வேண்டியது அவசியம். மேலும், ஏர் கண்டிஷனர்கள் இயங்காதபோது, அறைகள் காற்றோட்டமாக இருப்பது முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்விசிறியை(ஃபேன்) பொறுத்தவரை, ஜன்னல்கள் பகுதியளவு திறந்திருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அருகில் காற்று வெளியேற்றும் மின்விசிறி இருந்தால் (exhaust fan), நல்ல காற்று வெளியேற்றத்திற்காக அதையும் இயக்கத்தில் வைத்திருப்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது.