னஸ்கந்தா, குஜராத்

டக்கு குஜராத் பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தான் எல்லை ஓரமாக வடக்கு குஜராத் பகுதியின் பானஸ்கந்தா, பதான், கட்ச், சபர்கந்தா, மேசானா உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.   இந்தப் பகுதிகளில் ஆமணக்கு, சீரகம், காட்டாமணக்கு, பருத்தி, உருளை, கால்நடைத் தீவனம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பெருமளவில் பயிரிட்டு வருகின்றனர்.

நாட்டுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தொல்லை ஏற்படுவது போல் இந்த விவசாயிகளுக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாத தொல்லை ஏற்பட்டுள்ளது.

இந்த தொல்லை மனிதர்களால் இல்லை.   பாகிஸ்தானில் இருந்து பறந்து வரும் வெட்டுக்கிளிகளால் ஆகும்.   இந்த வெட்டுக்கிளிகள் சூடான் மற்றும் ஆப்பிரிக்காவின் சீ கோஸ்ட் பகுதியில் உருவாகி சௌதி அரேபியா வழியாகப் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளன.   அவை மேலும் அதிகரித்து தற்போது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன.

இந்த வெட்டுக்கிளிகள் எல்லையோர மாநிலமான குஜராத்தில் நுழைந்து பயிர்களை அழித்து வருகின்றன.   இது குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   ஆனால் வெட்டுக்கிளிகள் வருவதைத் தடுக்க அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என இங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து படையெடுப்பது போல் நிலத்தினுள் நுழைகின்றன.   இதனால் விவசாயிகள் பழைய முறையான மேளம் அடித்தல், மத்தள ஓசை எழுப்புதல் போன்றவற்றால் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர்.    ஆயினும் இந்த முறைகள் முழுப்பயன் அளிப்பதில்லை.

பானஸ்கந்தா மாவட்டம் வெட்டுக்கிளிகளால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.   இந்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் இரவும் பகலும் ஊடுருவி பயிர்களை நாசம் செய்கின்றன.    குஜராத் மாநில விவசாய அமைச்சர்  இதற்காக விசேஷ பூச்சிக் கொல்லி மருந்துகளை நிலங்களில் தெளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் விரைவில் இவை அழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.