குருவே சரணம்
                                                                                    குருவே சரணம்
ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில பாவ கிரகங்களாகவும் உள்ளன. எல்லாருக்கும் எல்லா கிரகங்களும் நன்மையோ தீமையோ செய்வதில்லை.
ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப இந்த அம்சங்கள் மாறுபடுவது உண்டு. ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும். இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும்.
சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த உள்ள வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் ‘குரு நின்ற இடம் பாழ்’ என்கின்றனர் ஜோதிடர்கள்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம், இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார்.
அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் உங்களுக்கு நன்மையைத் தருவாரா, குருவின் செயல்கள் என்ன, குரு பலம், குரு பார்வை, குரு யோகம் உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.
நாடாளும் யோகம்:

  • ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.

லக்னாதிபதி யோகம்:

  • ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8ல் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் உண்டாகிறது. இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.

கோடீஸ்வர யோகம்:

  • கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.

ராஜயோக பலன்:

  • குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்.

கலைத்துறையில் யோகம்:

  • ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, திரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.

கஜகேசரி யோகம்:

  • ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.

ஹம்ச யோகம்:

  • ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

குரு மங்கள யோகம்:

  • ஒருவரின் குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

குரு – சந்திர யோகம்:

  • யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன. ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள்.

கல்வியில் சாதனை:

  • ஒருவரின் ஜாதகத்தில் குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு – சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.

சந்திராதிபதி யோகம்:

  • ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

வசுமதி யோகம்:

  • ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.

சண்டாள யோகம்:

  • ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

சகடையோகம்:

  • சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் எதுவும் ஏற்படாது.

நன்றி : http://godphotosvideos.com/guru-bhagavan-tharum-rajayogam/