குர்கான்:

டில்லி அருகே ரியான் சர்வதேச பள்ளியில் கொலை செய்யப்பட்ட சிறுவனில் புத்தக பையை ஒரு பெண் ரத்தம் சொட்ட சொட்ட வகுப்பறைக்கு கொண்டு வந்து வைத்ததாக நேரில் பார்த்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

டில்லி அருகே உள்ள குர்கான் ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்த பிரதியுமான் தாகூர் என்ற மாணவன் நேற்று முன் தினம், பள்ளியின் கழிப்பிடத்தின் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான்.

இது குறித்து தாகூரின் வகுப்பு குழந்தைகள் நடந்த விஷயங்களை தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதில் சில தகவல்கள்…

பரரெனா ராணி என்ற சிறுவனின் தோழி கூறுகையில், ‘‘சம்பவத்தன்று காலை அவன் வகுப்பறையில் உட்காருவதற்காக 3வது வரிசையில் எனது பையை பக்கத்து இருக்கையில் வைத்து இடம்பிடித்து வைத்திருந்தேன். பள்ளியின் ஒலிபெருக்கியில் தினமும் காலையில் நடக்கும் அசெம்ப்ளி அழைப்பு வந்தது. அதற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோதும் தாகூர் இருக்கைக்கு வரவில்லை. இதனால் வகுப்பறையில் நாங்கள் தாகூர் குறித்து பேச தொடங்கினோம்’’ என்றார்.

மேலும், அந்த சிறுமி கூறுகையில், ‘‘தாகூரின் புத்தக பை ரத்தம் சொட்ட சொட்ட ஒரு ஆன்ட்டி (பெண்) வகுப்பறைக்கு கொண்டு வந்தார். அதில் அதிகளவில் ரத்தம் இருந்தது. சம்பாவி என்ற மாணவியை அந்த பெண் அழைத்து பையின் உள்ளே இருந்து டைரியை எடுக்க செய்தார்.

நமாம் என்ற மாணவியை அழைத்து பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க செய்தார். அந்த பெண் அங்கிருந்து டைரியுடன் சென்றுவிட்டார். மாணவிகளின் கையில் இருந்த ரத்த கறையை தொடைக்க டிஸ்யூ பேப்பர் வழங்கப்பட்டது’’ என்றார்.

மற்றொரு மாணவி கூறுகையில், ‘‘முதல் பீரியட் தொடங்கியவுடன் விளையாட்டு துறை ஆசிரியர் வகுப்பறைக்கு வந்து ஆங்கில பாடம் நடத்தினார். தாகூரின் பை குப்பைத் தொட்டிக்கு அருகிலேயே இருந்தது’’ என்றார்.

ராணி கூறுகையில், ‘‘ நாங்கள் வழக்கமாக ஹைடு அண்டு சீக் விளையாடுவோம். தாகூர் பூனையை போல் மேஜைக்கு அடியில், நடைபாதை, வகுப்பறைக்கு பின்புறம் பதுங்கி கொள்வான். சர்வேஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தேன். தாகூர் ஒருவனின் பிறந்தநாள் தான் மே மாதத்தில் வரும். அவன் வழக்கமாக உணவையும், விளையாட்டையும் என்னோடு தான் பகிர்ந்து கொள்வான்’’ என்றார்.

இரண்டாவது பீரியடில் விளையாட்டு ஆசிரியர் மாணவ மாணவிகளை தலையை குணிந்து உட்காருமாறு கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தாகூர் கழிப்பிடத்தில் தவறி விழுந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கேட்ட அவனது வகுப்பு தோழிகள் சிலர் அழுது புலம்பியுள்ளனர். இதன் பின்னர் நடன ஆசிரியர் நிலஞ்சனா மாணவ மாணவிகளை வகுப்புகளை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.