ஹரியானாவில் கனரக டிராக்டர் ஓட்டி வந்த நபருக்கு, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ. 59,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு உண்டாக்கியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் கூர்கான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் இன்று காலை தனது கனரக டிராக்டர் ஒன்றில், அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றுக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது குருக்கிராம் கிராமத்தை கடக்க அவர் முயற்சித்த போது, போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். சிக்னல் விதிகளை மீறிய அவரை தடுத்த போக்குவரத்து காவலர்கள், அவரிடம் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்று, உடற்தகுதி சான்று, வாகன காப்பீடு சான்று போன்றவைகள் இல்லாததை தெரிந்துக்கொண்டனர். அத்தோடு, அபாயகரமான பொருட்களை வாகனத்தில் ஏற்றுச் சென்றதாகவும், மாசு ஏற்படுத்தும் வாகனத்தை ஓட்டியதாகவும் அவரிடம் தெரிவித்த போக்குவரத்து காவலர்கள், தங்களுக்கு ஓட்டுநர் ஒத்துழைக்க மறுத்தது, டிராபிக் சின்கலை மீறியது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

இது தொடர்பாக அவரது கனரக டிராக்டரை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள், ஓட்டுநருக்கு ரூ. 59,000-ஐ அபராதமாக விதித்தனர்.

இதைப்போலவே குர்கானை சேர்ந்த சேர்ந்த அமீத் என்பருக்கு ரூ. 24 ஆயிரமும், குருக்ராமை சேர்ந்த தினேஷ் மதன் என்பவருக்கு ரூ. 23 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தனது வாகனத்தின் விலையே 15 ஆயிரம் ரூபாய் தான் எனவும், ஆனால் தனக்கு 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி போக்குவரத்து காவலர்களிடம் தினேஷ் மதன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.