ஸ்லாமாபாத்

மாத் உத் தாவா கட்சி தலைவன் ஹபீஸ் சயீத் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் 7 ஆம் தேதி முதல் விசாரணை நடக்க உள்ளதாகப் பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதியன்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் செயல்படும் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.   நவம்பர் 26 தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஹபீஸ் சயீத்  பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.

அத்துடன் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு இருந்ததாகப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருந்தார். ஆயினும் இந்த குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனால் ஹபீஸ் சயீத்தைக் கைது செய்யக் கோரி சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டது. ஹபீஸ் சயீதை அண்மையில் சர்வதேச நெருக்குதலால் பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சையத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வரும் 7ம் தேதி முதல் விசாரணையை லாகூர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. அரசு வழக்கறிஞர் சார்பில்  இந்த விசாரணையை தினசரி விசாரணையாக நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.