வாஷிங்டன்:

மும்பையில் 2008ம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானின் ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்க அந்நாட்டின் பஞ்சாப் மாகாண நீதித்துறை மறுஆய்வு வாரியம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ஹபீஸ் சயீத் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் அரசு போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். சயீதுக்கு வீட்டுக்காவலைத் தொடர வேண்டும் என்ற பாகிஸ்தான் அரசு கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததையும் அந்நாடு நினைவுபடுத்தியுள்ளது. மேலும், ஹஹீஸ் சயீதை உடனடியாக கைது செய்து பயங்கரவாத செயல்கள் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.