புனே: மராட்டிய நகரான புனேயில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் 51.5% பேரின் உடலில், வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிக்கள் உற்பத்தியாகின்றன என்பது சோதனையின் மூலமாக தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே, இவ்வாறாக அதிகளவு ஆன்டிபாடி தன்மைகள் கண்டறியப்பட்டிருப்பது புனேயில்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான தனி சர்வே மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மத்திய அரசின் சில அறிவியல் அமைப்புகளும் அடக்கம். மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

புனேயில் மட்டும் இதுவரை 130606 பாசிடிவ் நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியாவில், அதிக தொற்றுக்கு ஆளான நகரங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அடிப்படையில், இது மாநில தலைநகர் மும்பையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.