சென்னை:தமிழக அரசின் தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசின் தலைமை செயலராக 2019ம் ஆண்டில் சண்முகம் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலையில் முடிந்தது. ஆனாலும் கொரோனா காரணமாக அவரது பதவி காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

பதவி நீட்டிப்பும் அக்டோபரில் நிறைவடைய மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதற்கு மத்திய அரசு சம்மதித்ததால் அவரது பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதன்படி இம்மாதம் 31ம் தேதியுடன் அவரது பதவி காலம் நிறைவடைய உள்ளது. பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று சண்முகம் எழுதிக் கொடுத்து விட்டதால் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை செயலராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.