டெல்லி:

டல்நலப் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்து உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி கடந்த 30ந்தேதி (ஜூலை)  இரவு திடீரென உடல்நலப் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் காங்கிரசாரிடையே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர்   வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் அவர் நேற்று பிற்பகல் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக  ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார். சிகிச்சைக்காக அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையை ஏற்க தகுதியான நபர் இல்லாத நிலையில், மீண்டும் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.