ஷார்ஜா: கடந்த 5 மாதங்களாக மேற்கொண்ட கடின பயிற்சியால்தான், சென்னைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியது என்றுள்ளார் சஞ்சு சாம்சன்.

இவர், அந்தப் போட்டியில் 32 பந்துகளில் 9 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 74 ரன்களை விளாசினார். இதனால், அந்த அணி வென்றது.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 5 மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு, தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக உணர்கிறேன். கிரிக்கெட்டில், இளைய தலைமுறையினர் அடித்து ஆடவே விரும்புகின்றனர். யாரும் ஓடி ஓடி பீல்டிங் செய்ய விரும்புவதில்லை. விக்கெட் கீப்பிங்தான் அவர்களின் விருப்பமான ஒன்றாக உள்ளது.

எனது உடற்தகுதியைப் பராமரிக்க, உணவு மற்றும் கடினமான பயிற்சிகளில் கவனம் செலுத்தினேன். ஏனெனில், பவர் ஷாட் அடிக்க உடற்திறன் தேவை. உத்தப்பா மற்றும் பட்லர் இருந்தாலும், நான் கீப்பிங் செய்தது கேப்டன் & பயிற்சியாளரின் முடிவு” என்றார் அவர்.