ஐதராபாத்,

பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மீது, காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த மாதம் ( ஆகஸ்டு) 5 ம் தேதி இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில்  துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக  கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதியஜனதா சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெங்கையா நாயுடுவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி புகார்களை அடுக்கியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ், ‘’தூய்மையான உயர்ந்த பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வெங்கையா நாயுடு தகுதியானவரா?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் ரமேண், வெங்கையா நாயுடு தன் பதவியைப் பயன்படுத்தி தன் குடும்பத்தினருக்கு பல்வேறு சலுகைகளை அனுபவித்துள்ளார்.

ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் ஸ்வர்ண பாரத்  டிரஸ்டுக்கு, ஐதராபாத் மாநகராட்சி கடந்த ஜூன் 20 ஆம் தேதி, 2 கோடி ரூபாய் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த டிரஸ்ட்  வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட்டுக்கு சொந்தமானது என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே,  கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தெலங்கானா அரசு புதிய வாகனங்களை கொள்முதல் செய்தது. இந்த வாகனங்கள் அனைத்தும்,  வெங்கையா நாயுடுவின் மகன் ஹர்ஷவர்தன் நாயுடு நடத்தும் ஹர்ஷா டொயோட்டா, மற்றும்,  தெலங்கானா மாநில முதல்வரின் மகன் நடத்தும் ஹைமன்ஷு மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனக் கொள்முதல் வெங்கையா நாயுடுவின் செல்வாக்கு காரணமாக வாங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், பிரதமர் மோடி பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை என்றும்,  பாஜக ஆட்சியில் ஊழலே இல்லை என்றும் கூறி வருகிறார். ஆனால், வெங்கையா நாயுடுவோ அவரது மகளுக்கும், மகனுக்கும் சலுகை பெற்று தருகிறார்.

இப்படிப்பட்டவரை உயர்ந்த பதவியான துணை ஜனாதிபதி பதவிக்கு மோடி நிறுத்தி உள்ளார் என்றும், கடந்த 2004 ஆம் ஆண்டு குஷாபாவ் தாக்கரே நினைவு அறக்கட்டளைக்கு வெங்கையா நாயுடு தலைவராக இருந்தபோது… மத்திய பிரதேச தலைநகர் போபாலில் சில நூறு கோடிகள் மதிப்பு கொண்ட நிலம் மிகக் குறைந்த விலைக்கு அந்த டிரஸ்டால் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதில் மோசடிநடைபெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டு குறித்து பதில் தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு,

ஐதராபாத்தில் வரி விலக்கு பெற்றுள்ளது ‘’என் மகள் நடத்தும் டிரஸ்ட் என்பதால் அல்ல… இதுபோன்ற பல டிரஸ்டுகளுக்கு அவர்கள் செய்யும் சமூக சேவையின் அடிப்படையில் வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் இதுபோன்ற வரி விலக்குகள் நடந்திருக்கின்றன என்று கூறினார்.

மேலும், என் மகன் நடத்தும் நிறுவனத்தில், தெலங்கான அரசு வாகனங்கள் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.  என் குழந்தைகளின் வியாபாரத்தில் நான் என்றும் தலையிட்டது கிடையாது என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

மேலும் ம.பி.யில் நில மோசடி கூறப்பட்டுள்ள விசயம்,  ஏற்கனவே  நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவை என்றும் பதில் அளித்துள்ளார்.