சென்னை:

சிறுமி ஹாசினியையும், தனது தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பை அந்தேரி பகுதியில் மீண்டும்  கைது செய்யப்பட்டுள்ளான். அவனை சென்னை கொண்டு வர தமிழக போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சென்னை போரூரில் ஏழு வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து பின் எரித்துக் கொலை செய்ததாக தஷ்வந்த் என்பவன் கைது செய்யப்பட்டான்.   பிறகு அவன் ஜாமினில் வெளி வந்தான்.  பின்னர், பணத்துக்காக பெற்றத் தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானான்.

இதன் காரணமாக தமிழக போலீசார் தஷ்வந்தை தேடி வந்தனர். இந்நிலையில், மும்பையில் கைது செய்யப்பட்டு அழைத்து வந்தபோது, தமிழக போலீசாருக்கு டிமிக்கு கொடுத்துவிட்டு தப்பினார்.

அவரை பிடிக்க தமிழக போலீசார் மும்பை போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினார்.  தஷ்வந்தின் புகைப்படத்தைக் கொண்டு மும்பை போலீசார் விடிய விடிய தேடினர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களில் அவனது புகைப்படத்தை அனுப்பிவைத்து போலீசார் தேடினர்.

அப்போது, மும்பையின் அந்தேரி பகுதியில் தஷ்வந்த் மறைந்திருந்தது தெரிய வந்தது. அவரை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தஷ்வந்தை தமிழகத்திற்கு அழைத்துவந்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.