டில்லி:

ர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் களேபரம் குறித்து நேற்று பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், உச்சநீதி மன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவித்து உள்ளது.

அதன்படி, எம்எல்ஏக்கள்  ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ள உச்சநீதி மன்றம், சபாநாயகருக்கு,  அதற்கான காலஅவகாசமும் நிர்ணயிக்க முடியாது,  சபாநாயகர் முடிவு எடுத்தபிறகே, சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரிடம்  ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள  நிலையில், சபாநாயகர் உடடினயாக முடிவு எடுக்க மறுத்து விட்டதால், தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என  உத்தரவிட கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக காரசார விவாதங்கள் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றன. வாதத்தின்போது,  அரசியல் சாசன அதிகாரங்களை நினைவுபடுத்தும் சபாநாயகர், அதனை பின்பற்றாமல் இருப்பது ஏன்? என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள்  கேள்வி எழுப்பினர்.

அப்போது சபாநாயகர் சார்பில் வாதாடிய  அபிசேக் சிங்வி, சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதி மன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பரபரப்பான வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகர் முடிவில் தலையிட மறுத்த உச்சநீதி மன்றம் இது தொடர்பான உத்தரவை நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு அறிவிப்பதாக கூறியது.

நாளை (18ந்தேதி)  குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில்,  உச்சநீதி மன்றம் வழங்கும் தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை உச்சநீதி மன்ற அலுவல்பணிகள் தொடங்கியதும் முதல் வழக்காக கர்நாடக அரசு மீதான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பில், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. அவர்கள் கடிதம் மீது சபாநாயகர் முடிவு எடுக்கலாம்.  சபாநாயகர் முடிவெடுக்க எந்த கால வரையறையும் நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள்,  நியாயமான கால வரையறைக்குள் ராஜினாமா விவகாரம் பற்றி சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரின் முடிவு அறிவித்த பிறகே, அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடத்த வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை அவர்கள் வேண்டுமென்றால் வரலாம். கொறடா உத்தரவு அவர்களை கட்டுப்படுத்தாது

இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.