புதுடெல்லி:

ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.


இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெனரல் எம்.மஹாபாத்ரா கூறும்போது, ” 40 டிகிரிக்கு மேல் அல்லது சராசரி வெப்பநிலையை விட 4.5 டிகிரியிலிருந்து 6.4 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிக அளவில் அனல் காற்று வீசும். அப்போது, அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 43 டிகிரி வரை இருக்கும்.

மேற்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேசம், கிழக்கு மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்ட்ர மாநிலத்தில் மத்திய மகாராஷ்ட்ரா, மராத்வாடா மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் அனல் காற்று அதிக அளவில் வீசும்.
தற்போது ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அர்த்தம். ஆரஞ்ச் எச்சரிக்கை என்றால் தயாராக இருக்க வேண்டும் என்று அர்த்தம். மஞ்சள் எச்சரிக்கை என்றால் நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். பச்சை என்றால் எச்சரிக்கை இல்லை என்று அர்த்தம். நடவடிக்கைக்கு அவசியம் இருக்காது” என்றார்.