சென்னை

மிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் புவியரசன்,  சென்னையில் இன்று, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக திருவள்ளூர், வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடற்கரைப் பகுதியில் இருந்து 400 கி.மீ. தாண்டி, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.