திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் 7 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த சில நாட்களில் வடகிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 19ம் தேதி கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களிலும், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களிலும் செப்டம்பர் 20ம் தேதியும், செப்டம்பர் 21ம் தேதி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களிலும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

22ம் தேதி வரை கடலில் 45-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.