சென்னை

டுத்த 3 நாட்களில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாகத் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் அதிகம் இருக்குமே தவிர மழை மிகவும் குறைவாகவே காணப்படும்.   ஆனால் இந்த வருடம் இந்த காலத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.   இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.  தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் இன்று பெய்ய வாய்ப்புள்ளது.

அத்துடன், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  அதே வேளையில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.