மும்பை:

டந்த 3 நாட்களாக மும்பையில் பெய்து வரும் பேய் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து பலியான  13 பேர்  உள்பட இதுவரை 16 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். அதுபோல புனேவில் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பேய்மழை கொட்டி வருகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்,  தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பஸ், ரெயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களை  மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக மும்பையில், அரசு மற்றும்  தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் மட்டும் செயல்படுகின்றன. இன்று கனமழை பெய்வதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் மேலும் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அதுபோல கனமழை காரணமாக புனேவில் நள்ளிரவு 1 மணி அளவில்  அம்பேகான் பகுதியில் உள்ள சிங்காத் கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர், விரைந்து வந்து  மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும்  விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.