சென்னை:

டகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில்,  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில்  ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வரும் 27ஆம் ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 28, 29ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம்,  இந்த புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது, மும்பைக்கு தெற்கு-தென்மேற்கே 380 கிலோமீட்டரில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள  கியார்  புயல், அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும்.

இதேபோல, கடலோர ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி, மேற்குமத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்தடுத்த நாட்களில் கடலோர கர்நாடகம், மும்பை, கோவா, ஒடிசா, அசாம், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகவும், கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.