யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவி ஹேமலதா, அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சென்னை, மனித நேய மையம் நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். மையத்தில் படித்தவர்.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளுக்கு  அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடக்கிறது. இதை  யு.பி.எஸ்.சி. நடத்தி வருகிறது.

இந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் வென்றால் அவர்கள் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுகிறார்கள்.

அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் அவர்கள்  பெற்ற ரேங்க் பட்டியல்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

அப்படி சமீபத்தில் நடந்த நேர்முகத்தேர்வில்  தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா முதலிடம் பெற்றார்.

இந்த தேர்வில் 2 ஆயிரத்து 961 பேர் போட்டியிட்டனர்.

முன்னதாக சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 145 பேருக்கு டில்லி மற்றும்  சென்னையில்  நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.   1,099 பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் மனித நேய மையத்தில் படித்த 17 பெண்கள் உள்பட 49 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவர்களில் அகில இந்திய அளவில் நேர்முகத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவி ஹேமலதாவும் ஒருவர்.

இவரது ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, நெரிஞ்சிப்பேட்டை ஆகும். இவர்  பொறியியல் முதுகலை பட்டதாரி.  இவரது பெற்றோர் முருகேசன்–ஜோதிலிங்கம் ஆவர்.

நேர்முகத் தேர்வில் முதலிடம் பிடித்தது பற்றி மாணவி ஹேமலதா தெரிவித்ததாவது:

“வேளாண்மை மற்றும் நீர்பாசனம் தொடர்பான பொறியியல்  படிப்பை சென்னை கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன்.  அப்போதே,  மனிதநேய பயிற்சி மையம் சார்பில் கல்லூரிக்கு வந்து மாலை நேரத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து பயிற்சி அளித்தார்கள்.  அதில் சேர்ந்து நான் பயிற்சி பெற்றேன்.  பிறகு அதே கல்லூரியில் எம்.இ. நீர்வளம் குறித்து படித்தேன். அப்போதும்  அதே மையத்தின்  பயிற்சியில் சேர்ந்து  படித்தேன்.

இதையடுத்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தேன்.   முதல்நிலை தேர்வில்  தேர்ச்சி பெற்று, மெயின் தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து   யு.பி.எஸ்.இ. நடத்திய நேர்முகத்தேர்வுக்கு டில்லிக்கு விமானத்தில் சென்று வந்தேன். நேர்முகத்தேர்வை சிறப்பாக செய்து முடித்தேன். இப்போது முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறேன்.

மனிதநேய மையம் என்னைப் போன்ற பலருக்கு இலவசமாக பயிற்சி அளித்தது.  நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள நான் டில்லி சென்றபோது, பயணத்துக்கான அனைத்து செலவையும் மையமே ஏற்றுக்கொண்டது.

மனிதநேய மையத்துக்கும் அதன் சேர்மேன் சைதை துரைசாமிக்கும் நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஹேமலதா தெரிவித்தார்.

இதே மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்  ஏற்கனவே ஐந்து முறை  சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.