இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் என் கதையைத் திருடி இயக்குநர் மித்ரன் ’ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைக்கு இயக்குநர் மித்ரன் ஒத்துழைப்பு தராததால், நீதிமன்றத்தை நாடவும் என்று எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை போஸ்கோ பிரபுவுக்கு எழுதியுள்ளார். அதில் இரண்டு கதையும் ஒன்றே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் மித்ரன் தான் எழுத்தாளர் சங்கத்துக்கு எழுதிய கடிதங்களின் நகலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 22-11-2019 அன்று எழுதிய கடிதத்தில் மித்ரன் கூறியிருப்பதாவது:

”தங்களின் அழைப்பின் பெயரில் நேற்று (21.11.2019) மாலை தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தேன். என்னுடைய ’ஹீரோ’ கதை சம்பந்தமாக, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 25 நபர்கள் முன்னிலையில் நான் என்னுடைய கதையையும் அது சம்பந்தமாகத் தன்னிலை விளக்கத்தையும் அளித்தேன்.

எனக்கு முன்னாலேயே, புகார் அளித்த நபர் அவருடைய கதையைப் பதிவு செய்திருப்பதினால் நான் அந்த நபருக்குத் தக்க நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தினீர்கள்.

அதற்கு, நான் என் சார்பான கீழ்க்கண்ட வாதங்களை முன்வைத்தேன்.

அவை:

* நான் பத்திரிகை செய்தியில் இருந்துதான் என் கதையின் கருவை எடுத்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன். மேலும், கதை உருவான சிறுசிறு வளர்ச்சிக் கட்டங்களுக்குமான பதிவுகளையும் ஆவணங்கள், ஆடியோ ஃபைல் வைத்திருக்கிறேன்.

* நான் என் கதையையும் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

* ஒத்த சிந்தனையை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள். கதையைப் பதிவு செய்து வைப்பது திருடு போய்விடாமல் இருக்கவும் பாதுகாப்புக்கும்தானே தவிர, இதுபோல யாருமே சிந்தித்துவிடக்கூடாது என்பதற்கல்ல.

* புகார் அளித்தவருக்கும் என் படம் சார்ந்த குழுவினர் யாருக்கும் கதை சம்பந்தமாக எந்தவித தொடர்பும் முகாந்திரமும் இல்லாத சூழ்நிலையில் என் சொந்த சிந்தனையை அங்கீகரிக்க மறுப்பது இனிவரும் காலங்களில் எப்படி கதை, திரைக்கதை எழுதுவது என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர் எனக்கு முன்பே அவர் கதையைப் பதிவு செய்து வைத்திருப்பதினால் மட்டுமே நான் அவர் கதையிலிருந்துதான் சிந்தனையால் உந்தப்பட்டிருப்பேன் என்று முடிவிற்கு வந்துவிட்டீர்களா?

* அப்படி இல்லையென்றால், நான் பலமுறை தங்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும், ஏன் தாங்கள் பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவரின் கதையையும் ஒப்பிட்டுப் பார்க்க மறுக்கிறீர்கள்?

* மேலும், நான் என்னுடைய திரைக்கதையைச் செம்மைப்படுத்த மூன்று திரை எழுத்தாளர்களை (திருவாளர்கள் பொன்.பார்த்திபன், சவரிமுத்து, அந்தோணி பாக்கியராஜ்) இந்தப் படத்தில் நியமித்து, அவர்களுடைய பங்களிப்பின் முக்கியவத்தை உணர்ந்து, அவர்களுக்கு நல்ல சம்பளத்தையும் பெற்றுத் தந்திருக்கிறேன். அவர்களுக்கும் இந்த திரைக்கதையில் பெரும் பங்கு இருக்கிறது. ஆகவே, எழுத்தையும் எழுத்தாளர்களையும் என்றுமே நான் மதிப்பவன் என்றபோதிலும், என் கதைக்குச் சிறிதும் சம்மந்தப்படாத ஒருவருக்கு நான் ஏன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்? ஒன்றரை ஆண்டுகளாக உழைத்த எங்கள் குழுவின் உழைப்பை உதாசீனப்படுத்துவதுதான் சங்கத்தின் நிலைப்பாடா?

* முடிவாக, பதிவு செய்யப்பட்ட என் கதையையும் புகார் கொடுத்த நபரின் பதிவு செய்யப்பட்ட கதையையும் எங்கள் இருவர் முன்னிலையில் ஒப்பிட்டுப் பார்த்து, இருவருடைய கதையும் ஒன்றாகவே இருக்கிறதா என்று ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இவ்வாறு நான் தெரிவித்தேன்.

இருப்பினும், தாங்களும் மற்றவர்களும் எந்த ஒரு முடிவிற்கும் வராததால், மீண்டும் ஒரு முறை பதிவு செய்யப்பட்ட இரண்டு கதைகளையும் முறையாக ஒப்பிட்டுப் பார்க்கும்படி தங்களை வேண்டியும் அதனை வலியுறுத்தியும் கூறி விடைபெற்றேன்.

மேலும், இக்கடிதத்தின் மூலமாக நான் தங்களை மீண்டும் பணிவன்புடன் கேட்டுக் கொள்வதெல்லாம், தயவுசெய்து பதிவு செய்யப்பட்ட இரு முழு திரைக்கதைகளையும் முறையாக ஒப்பிட்டுப் பார்த்து, தக்க முடிவை எடுக்க வேண்டும் என்பதே.

தாங்கள் பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவர் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நாளை, நான் படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் காரணத்தால், தகுந்த கால அவகாசம் கொடுத்து, முன்கூட்டியே அறிவித்தால் நான் அந்த நாளில் வருவதற்கு ஏதுவாக இருக்கும்’’.

இவ்வாறு மித்ரன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 9-12-2019 அன்று எழுத்தாளர் சங்கத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் மித்ரன் கூறியிருப்பதாவது:

”கடந்த 7.12.2019 அன்று, தங்கள் அழைப்பின் பெயரில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் அலுவலகத்தில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில், என்னுடன் ‘ஹீரோ’ படத்தின் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ், இந்தப் படத்தின் எழுத்தாளர்கள் சவரிமுத்து, ஆண்டனி பாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக யுரேக்கா மற்றும் மதுரை தங்கம் ஆகியோரும், நம் சங்கத்தில் ‘ஹீரோ’ கதை சம்பந்தமாகப் புகார் அளித்த போஸ்கோ பிரபுவும் வருகை புரிந்தனர்.

ஃபெப்சி தலைவர் முன்னிலையில் நடந்த ஆலோசனையின் முடிவில் இந்தப் பிரச்சினையில் ஏற்கெனவே இதுவரை சம்பந்தப்படாத ஒரு நடுநிலையாளரைக் கொண்டு, பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவரின் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்று அங்கு இருந்த அனைவரும் ஏக மனதாக முடிவெடுத்தோம்.

அதன் அடிப்படையில் நடுநிலையாளர்களைக் கொண்ட ஒரு குழுவை தயவுசெய்து, விரைவில் அமைத்து என்னுடைய மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் புகார்தாரர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவரின் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்தப் பிரச்சினையை ஒரு முடிவிற்குக் கொண்டு வரும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு மித்ரன் தெரிவித்துள்ளார்.